2026 ஆம் ஆண்டின் முதல் நாளில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.110 வரை உயர்ந்துள்ளது வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்துஸ்தான், பாரத், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 14.20 கிலோ எடையில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரையும், 19 கிலோ எடையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரையும் விநியோகம் செய்து வருகின்றன.
சர்வதேச சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.
இதில் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1) சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 110 உயர்ந்து ரூ.1849.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இல்லாமல் ரூ.868.50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
ஆண்டின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது சிறு வணிகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் வியாபாரம் கடும் நெருக்கடியில் உள்ள நிலையில் தற்போதைய சிலண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக விலை குறைந்து வந்த நிலையில் 2026ம் ஆண்டின் முதல் நாளில் சிலிண்டர்விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
