தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் கைதுக்குப் பிறகு தேசிய தலைமையைத் தொடர்புகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘தொடர்ந்து பாஜக நிர்வாகிகளை கைது செய்து வருகிறார்கள். இப்போது வரை சுமார் 20 பாஜக நிர்வாகிகள் ரிமாண்டில் இருக்கிறார்கள். இதுகுறித்து கட்சியின் தேசியத் தலைமை தலையிட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
அதன் பேரில் தமிழ்நாட்டில் பாஜகவினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஆராய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக தேசிய தலைவர் நட்டா அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்..
அந்தக் குழுவில் டி.வி.சதானந்த கவுடா, சத்ய பால் சிங், டி.புரந்தேஸ்வரி, பி.சி.மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு 27ம் தேதி தமிழகம் வருகை தருகிறது.
இந்தக் குழுவில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா, முன்னாள் மும்பை மாநகர போலீஸ் கமிஷனரும் எம்.பி.யுமான சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, மத்திய பெங்களூர் பாஜக எம்பியான பி.சி.மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்திற்கு வருகை தரும் குழு தமிழகத்தின் பாஜகவினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கையை தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அறிக்கை கொடுக்கும் என்று பாஜகவினர் கூறியுள்ளனர்.
இந்தக் குழுவின் சிறப்பு என்னவென்றால்… இக்குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒருவர் தமிழ்நாட்டின் திமுக அமைச்சர் ஒருவருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதாகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டார் என்பதற்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநிலம் முழுதும் பாஜக போராட்டம் நடத்தியது.
அப்படிப்பட்ட அமைச்சர் சேகர்பாபுவின் நெருக்கமான நண்பர் தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ். அந்த தொழிலதிபரின் சம்பந்திதான் இக்குழுவில் இடம்பெற்றுள்ள மோகன் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.
–வேந்தன்
’போராட்டம் வாபஸ்’: ஆம்னி பேருந்துகள் இன்று வழக்கம்போல் இயங்கும்!
‘தளபதி 68’ பூஜை: ரெட் டீ ஷர்ட்டில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்
