வேலூர் மத்திய மாவட்ட திமுகவின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நவம்பர் 16 ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த லத்தேரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்றார். வேலூர் மாவட்டச் செயலாளர் நந்தகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் கூட்டம் கூடியது.
அப்போது, “உங்க மனசுல என்ன இருக்கோ, எல்லாத்தையும் இங்க பேசலாம்” என்று நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் அழைப்பு விடுத்தார்.
அந்த வகையில் கே.வி.குப்பம் ஒன்றிய துணைச் செயலாளராக இருக்கும் கே.ராஜேந்திரன் சற்று அதிகமாகவே மனம் திறந்து பேசிவிட்டார்.
அவரது பேச்சு கூட்டத்தில் அடிமட்ட நிர்வாகிகளிடம் இருந்து பலத்த கைதட்டலையும், மேடையில் இருக்கும் அமைச்சர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பலத்த அதிர்வையும் ஏற்படுத்தியது.

அப்படி என்னதான் பேசினார் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன் ?
“நான் நாப்பது வருசத்துக்கு மேல திமுகவுல இருக்கேன். வரப் போற நாடாளுமன்ற தேர்தல்ல 40க்கு 40 ஜெயிக்க வைக்கணும்னு எல்லாரையும் அன்போடு கேட்டுக்குறேன். சரி, கஷ்டப்பட்டு நம்ம ஜெயிக்க வைக்கிறோம்.
ஜெயிச்சவங்களாம் கார்ல போறாங்கோ. ஆனா நாம வண்டிக்கு பெட்ரோலுக்குக்கூட பணமில்லாது இருக்குறோம். வீட்டாண்ட போனா திரும்பிப் பாக்க ஆளில்ல. மெட்ராஸ் வரைக்கும் போறோம், சாப்டியானு கேக்கறதுக்கு ஆளில்லை.
ஒரு நாலு நாளைக்கு முன்ன சொல்றேன். ’8 லட்ச ரூபா வேலை தர்றேன்… 12% கமிஷன் கொடு’னு மேற்கு ஒன்றியத்துல ஒரு மூத்த தலைவரு கேக்குறாரு. எப்படிங்க தர முடியும்? 40 வருசமா கட்சியில இருக்கேன். எவ்வளவு செலவு பண்ணிருப்பேன்.
எலக்சனுக்கு மாடா உழைக்கிறோம். ஆனா எங்களுக்கு இதுதான் நிலைமை. டிஎம்கே வாழ்க, நாப்பதும் நமதே” என்று பேசினார் பி.கே.புரத்தைச் சேர்ந்த கே.வி.குப்பம் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன். அவர் பேசிய இரண்டரை நிமிடங்களும் கூட்டத்தினரின் அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்த வீடியோ வைரலான நிலையில், நாம் ராஜேந்திரனையே தொடர்புகொண்டோம். “8 லட்ச ரூபாய் டெண்டருக்கு 12% கமிஷன் கேட்ட அந்த மூத்த தலைவர் யாருங்க?” என்று அவரிடம் கேட்டோம்.
சிரித்துக் கொண்டே நம்மிடம் பேசிய ராஜேந்திரன், “ஐயா… நான் திமுகவுல இருக்குறேன். கட்சிக் கூட்டத்துல மனசு விட்டு உண்மைய பேசுங்கனு சொன்னதால உண்மைய பேசிட்டேன்.
மேடையிலயே மந்திரியும் மாவட்டச் செயலாளாரும் இருந்தாங்க. அவங்க கூப்பிட்டு யார் அவர்னு கேட்டா சொல்லுவேன். ஆனா, அதை உங்ககிட்ட சொல்ல முடியாதுங்களே” என்றார் ஒரிஜினல் திமுக காரராய்.
-ஆரா