தவெக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்த பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சி அமைத்தார். இதைத் தொடர்ந்து, விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, யூடியூபர் மாரிதாஸ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
குறிப்பாக, அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக அவர் வெளியிட்ட புகைப்படம் போலியாக உருவாக்கப்பட்டது என்று புகார் அளிக்கப்பட்டது. மேலும், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீதும் அவர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
இந்நிலையில், மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்த மாரிதாஸை, சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று (ஜூன் 8) கைது செய்துள்ளனர். அவரை விசாரணைக்காகச் சென்னைக்கு அழைத்துச் செல்கின்றனர். அதேசமயம், இந்தக்கைது தொடர்பான அதிகாரப்பூர்வ காரணங்கள் மற்றும் வழக்கு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
