லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அப்படத்துக்கான திரையரங்க முன்பதிவு வெளிநாடு, பிற மாநிலங்கள், தமிழ்நாடு என எல்லா இடங்களிலும் தொடங்கப்பட்டு முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விஜய் ரசிகர்மன்றத்தை சேர்ந்தவர்களுக்கு மொத்தமாக வழங்கப்பட்டுவிட்டது.
திரையரங்குகளில் இருந்து வாங்கப்பட்ட லியோ படத்தின் முதல் நாள் டிக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வரும் சூழலில் சென்னை நகரம், செங்கல்பட்டு விநியோக ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்கப்படவில்லை.
அதற்குக் காரணம், சென்னை செங்கல்பட்டு விநியோக பகுதிகளில் திரையரங்குகளுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்பதுதான்.
என்ன காரணம் திரையரங்குகள் வட்டாரத்தில் விசாரித்தபோது…
“வழக்கமாக விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் மினிமம் கியாரண்டி அடிப்படையில் விற்பனை செய்யப்படும் .
ஆனால், லியோ படத்தின் வியாபாரம் விநியோக முறையில் வியாபார ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
மினிமம் கியாரண்டி முறையில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வசூலாகும் தொகையில் தயாரிப்பாளருக்குப் பாதிதான் வரும் மீதி விநியோகஸ்தருக்குப் போகும்.
விநியோக முறையில் வசூலாகும் மொத்தத் தொகையும் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும். அதில், ஐந்து அல்லது பத்து சதவீதம் கமிஷனாக விநியோகஸ்தருக்குக் கிடைக்கும்.
அதனால், இந்தப்படத்தின் மொத்த வசூலும் தமக்கே வரவேண்டும் என முடிவு செய்த லியோ படக்குழு எல்லா விநியோகப் பகுதிகளிலும் மினிமம் கியாரண்டி என்று இருந்ததை விநியோக முறைக்கு மாற்றியிருக்கிறது.
அதோடு, திரையரங்குகளோடு ஒப்பந்தம் போடப்போனால் அங்கும், எங்களுக்கு ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் படங்களுக்கு போன்று 80% பங்கு வேண்டும் என்று கேட்கிறார்களாம். அதனால் திரையரங்குக்காரர்கள் அதிர்ச்சி அடைந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதி வியாபாரத்தில் மால், மற்றும் தனித்திரையரங்குகள் ஆகியவற்றிற்கு தனித்தனியாக வியாபாரம் நடந்திருக்கிறது.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில், எல்லாப் படங்களுக்குமே ஐம்பது விழுக்காடுதான் பங்கு தருவார்கள். அவர்களிடமும் எங்களுக்கு 60 விழுக்காடு தரவேண்டும் என்று கேட்டுள்ளது லியோ குழு.
இதனால், சென்னை, மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஒப்பந்தம் போடாமல் இருக்கின்றனவாம்.
லியோ படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதென்பதால் இதுவரை இருந்த வியாபார முறைகளை மாற்றி எல்லாப் பணமும் தங்களுக்கே என்று சொல்கிறது“ தயாரிப்பு வட்டாரம்.
இவையெல்லாம் படம் நன்றாக இருந்தால் மட்டுமே நடக்கும். இல்லையெனில் எல்லாமே தலைகீழ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மிக கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில்?
பழைய சகோதரன் பாலஸ்தீனமா? புதிய தோழன் இஸ்ரேலா? சவுதி இளவரசர் முடிவு என்ன?