இயக்குனர் ஜேசன் சஞ்சயின் முதல் திரைப்படமான “சிக்மா”வின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.
முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது.
இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூரி, “சஞ்சய் தம்பி உங்களுடைய பேட்டியை பார்த்தேன். அந்தப் பேட்டியில் மிகவும் அழகாக, நிதானமாக, தெளிவாக, கவனமாக அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசி இருக்கிறீர்கள்.
இது சாதாரண விஷயம் அல்ல. மிகப்பெரிய விஷயம். சினிமாவுக்கு என்று படித்து உங்களை தயார்படுத்திக்கொண்டு திறமையை வளர்த்துக்கொண்டு பிறகு இந்த சினிமாவை எடுக்க வந்திருக்கிறீர்கள்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் குமரன் அவர்களைப் பார்க்க வந்தபோது, இதுபோல படம் எடுக்கிறேன் கதை கேட்க முடியுமா என்று கேட்டீர்கள்.
அப்போது இரண்டரை மணி நேரம் கதை சொன்னீர்கள். ஒரு இடத்தில் கூட பிசிர் தட்டவில்லை. கதை சொல்லி முடித்ததும் ஓகேவா என்று கேட்டார்.
ஆனால் அந்த இரண்டரை மணி நேரமும் விஜய் அண்ணாவிடம் பேசியது போல இருந்தது. உங்கள் அப்பாவுடன் இருப்பது போல் உணர்ந்தேன். அப்படி இருந்தது.
இன்றைக்கு இயக்குனர்கள் லேப்டாப், டேப் ஆகியவற்றைப் பார்த்து கதை சொல்கிறார்கள். ஆனால் இரண்டரை மணி நேரம் ஒரு லைன் கூட விடாமல் கதை சொன்னீர்கள். ஹேண்ட்ஸ் ஆப்.
நீங்கள் படங்கள் எடுப்பதோடு நடிக்கவும் வேண்டும். நான் தமிழ்குமரன் அண்ணனிடம் பேசும்போது, ‘சஞ்சய் எவ்வளவு அழகாக இருக்கிறார். அப்படியே விஜய் அண்ணன் மாதிரியே இருக்கிறார். தயவுசெய்து நடிக்க சொல்லுங்கள்’ என்று கேட்டேன்.
எனவே எல்லோருடைய ஆசைக்காக நீங்கள் நடிக்கவும் வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
