
1999-ஆம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் சூர்யா – ஜோதிகா இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்போதுதான் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ‘ ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’ ‘சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடித்தனர். ‘காக்க காக்க’ படத்தின் படப்பிடிப்பின் போது இவர்களது நட்பு ஆழமான காதலாக மாறியது.


இருவீட்டாரின் சம்மதத்துடன் செப்டம்பர் 11, 2006 அன்று இவர்களது திருமணம் மிக ஆடம்பரமாக நடைபெற்றது.


இவர்களது திருமணம் நடந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதை இந்த நட்சத்திர ஜோடி கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாகதங்கள் அல்லது தங்களது மகள், மகன் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

வெளிநாட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.


இதுதொடர்பாக ‘தொடர்ச்சி’ (The Sequel) என்ற பெயரில் திருமண உறுதிமொழி புதுப்பித்தல் காணொலி ஒன்றையும் இருவரும் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”எங்கள் இருபது ஆண்டுகால ‘காதல் மற்றும் சண்டைகள்’ நிறைந்த பயணத்தைக் கொண்டாடும் விதமாக, எங்கள் திருமண உறுதிமொழிகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்கிறோம்.


இது திருமண வாழ்க்கையைக் கொண்டாடும் நிகழ்வு அல்ல. மாறாக, குறைகள், விட்டுக்கொடுத்தல்கள், புரிதல், தியாகங்கள் மற்றும் சுயநலமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டாடும் நிகழ்வு இது.

ஒருவருக்காக ஒருவர் நாங்கள் மாறியிருக்கும் விதத்தைக் கொண்டாடும் தருணம். எவ்வளவு விசித்திரமான முரண் இது.

நான் எப்போதும் மகிழ்ச்சியானவளாக இருக்க உறுதியளிக்கிறேன், வாழ்க்கையைக் கொண்டாட உறுதியளிக்கிறேன், ஒருபோதும் குறை கூறமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்,


நன்றியுணர்வுடன் இருக்க உறுதியளிக்கிறேன், ஆரோக்கியமாக இருக்க உறுதியளிக்கிறேன், சிறந்த தாயாக இருக்க உறுதியளிக்கிறேன், என் சூர்யா, உன்னிடம் உறுதியளிக்கிறேன். நம் நட்பைப் போற்ற உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
