அதிமுக (AIADMK) பிளவுபட்ட நிலையில் எந்த அணி அங்கீகரிக்கப்படும்? என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் (JCD Prabhakar) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று மே 17-ந் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அளித்த பதில்களும்
கேள்வி: அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என டிடிவி தினகரன் சொல்லி இருக்கிறாரே..
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: அரசியல் சார்ந்த, இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் இப்போது பதில் சொல்ல விரும்பவில்லை. எங்களைப் பொறுத்தவரைக்கும் அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்வர் விஜய் முனைப்பாக இருக்கிறார். அவருடைய பணி சிறப்பாக இருக்கிறது. அவர் போட்ட முதல் நாள் உத்தரவிலிருந்து தொடர்ந்து போட்டு வருகிற அத்தனை உத்தரவுகளும் இன்றைக்கு மக்களுடைய மதிப்பை பெற்றிருக்கிறது, வரவேற்பை பெற்றிருக்கிறது.
அரசியலில் ஒரு வித்தியாசமான ஒரு தலைவரை.. மீண்டும் நான் ஏற்கனவே பலமுறை சொன்னது போல—இவரைப் போல கிடைக்கமாட்டாரா என்று ஏங்கிக் கிடந்த மக்களுக்கு மீண்டும் ஒரு எம்.ஜி.ஆராக அவர் கிடைத்திருக்கிறார். அவரை அசைக்கிற சக்தி இந்த தமிழ்நாட்டில் இல்லை என்பதை நான் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: அதிமுகவினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பிரிவா மனு கொடுத்திருக்காங்க.. அது. ஆய்வுல இருக்குன்னு சொல்லியிருக்கீங்க. இந்த ஆய்வுக்கான காலக்கெடு எதுவும் இருக்கா
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: சட்டசபை விதிகளின்படி மனுக்கள் தரப்படுகிற போது, முறையாக சட்ட விதிகளுக்கு உட்பட்ட, சட்டசபை விதிகளுக்கும் உட்பட்டு, சட்ட விதிகளுக்கும் உட்பட்டு ஆய்வு என்பதற்கு காலக்கெடு கிடையாது. ஆனால், விரைவிலே அதைப்பற்றி உரிய முடிவு, உரிய நேரத்தில் எடுக்கப்படும்.
கேள்வி: அதிமுகவில் ஒரு தரப்பினர் ஆளுநரை சந்திக்கிறதா சொல்லியிருக்காங்க.. கட்சியினுடைய தலைமையில் இருக்கிறவங்க கொடுக்கக்கூடிய மனுக்களைத்தான் பரிசீலனை செய்யணும், மற்றவங்க தரக்கூடியதை ஏற்றுக் கொள்ளக் கூடாதுன்னு முன்னாள் சபாநாயகர் அப்பாவு வந்து சொல்லியிருக்காரு.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: முன்னாள் சபாநாயகர் அப்பாவு அவர்கள் சொன்னது சொன்னதாக இருக்கட்டும். எனக்கும் விதிமுறைகள் தெரியும். விதிமுறைகளுக்கு உட்பட்டு, மக்கள் “இதுதான் சரியான முடிவு” என்று சொல்லக்கூடிய அளவில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்த முடிவுகள் எடுக்கப்படும்.
