விளாத்திகுளம் மாணவி படுகொலை வழக்கில் இன்று குற்றவாளி தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கி தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் விஜய் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் பதிவில், “தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட தர்ம முனிஸ்வரனுக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று இரட்டை மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கில், 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, விரைவான விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த கொடூரமான சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் நீதி வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசின் நடவடிக்கைகளுக்கு வலுவான ஆதரவாக அமையும் இந்தத் தீர்ப்பு பாராட்டுக்குரியது.”என தெரிவித்துள்ளார்.
