புதுச்சேரி மக்கள் தான் எம்ஜிஆரை அறிமுகம் செய்தனர் என விஜய் கூறிய நிலையில், எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் கருப்பு சிவப்பு கொடியை பற்றியும், அண்ணாவைப் பற்றியும், திமுகவின் கொள்கையை பற்றியும் பிரச்சாரம் செய்தவர் என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து 72 நாட்களுக்கு பின்னர் இன்று விஜய் புதுச்சேரி உப்பளம் பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது விஜய் பேசுகையில், புதுச்சேரி அரசு கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசைப் போல கிடையாது. ஏனென்றால் வேறு ஒரு அரசியல் கட்சி நடத்துகிற நிகழ்ச்சியாகவே இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியாக வரக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் காட்டாமல் புதுச்சேரி அரசு நடந்துகொண்டுள்ளது.
இதைப் பார்த்து தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால் அவர்கள் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “கரூரில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தினாரா.. எனக்கு தெரியவில்லை.. கரூரில் அனுமதி வழங்கி காவல்துறையினர் பாதுகாப்புடன் தானே கூட்டம் நடத்தினார். இவருக்கு அனுமதி அளித்து, காவல்துறை பாதுகாப்பு அளித்து சாலையோர போக்குவரத்தை எல்லாம் திசை திருப்பிவிட்டு கரூரில் தமிழக அரசு கொடுத்த அனுமதியின் பெயரில்தான் அந்தக் கூட்டம் அங்கு கூடியது.
விஜய் தாமதமாக வந்ததால்தான் அங்கிருந்த மக்கள் மயக்கம் அடைந்து விழுந்தார்கள் என்பதை மறைப்பதற்காக, தமிழக மக்களை முட்டாள்கள் என்று எண்ணிக் கொண்டு திமுக அரசு தான் காரணம் என்று உளறிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
மேலும் எம்ஜிஆரை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது புதுச்சேரி மக்கள்தான் என்று பேசியது குறித்த கேள்விக்கு, “எம்ஜிஆர் ஏறத்தாழ 19 ஆண்டுகள் தி மு கழக உறுப்பினராக இருந்தார் தனது திரைப்படங்களில் கருப்பு சிவப்பு கொடியை பற்றியும், அண்ணாவைப் பற்றியும் திமுகவின் கொள்கையை பற்றியும் பிரச்சாரம் செய்தவர்” என்று தெரிவித்துள்ளார்.
