வெற்றியின் மீது, எங்களை ஆதரிக்கும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் நன்றி என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதல்வருமான விஜய் தனது எக்ஸ் பதிவில், “மனசாட்சியுடன் கூடிய ஜனநாயகத்தை நிறுவிய மக்கள் அரசின் மீது மக்கள் நம்பிக்கை கோரும் நம்பிக்கைத் தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கையின் மூலம் மக்களால் ஆதரிக்கப்பட்டு, ஆதரவாக வாக்களிக்கப்பட்ட இந்த நம்பிக்கைத் தீர்மானம், அதன் மூலம் அமைந்த நமது அரசுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது.
இந்த வெற்றியின் மீது, எங்களை ஆதரிக்கும் அனைத்து மதிப்பிற்குரிய கட்சித் தலைவர்களுக்கும், அந்தக் கட்சிகளைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில், எப்போதும் எங்களுடன் துணை நிற்கும் எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எங்களது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் தருணத்தில், தேர்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்த அனைத்து மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்வது எங்களது கடமையாகும். தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி.”என தெரிவித்தார்.
