தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக குதிரை பேர விவகாரம் குறித்து வழக்கு தொடர்ந்தால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் (Vaiko) பேட்டி மிக முக்கியமான ஆவணமாக கருதப்படும் என்று பாஜகவின் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக நிர்வாகியான கே.எஸ். ராதாகிருஷ்ணன், முன்னர் வைகோவின் வலது கரமாக மதிமுகவில் பணியாற்றியவர். சென்னையில் வைகோ நேற்று அளித்த பேட்டி தொடர்பாக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்கள் சந்திப்பில் ,தங்கள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் ராஜினாமா செய்து இடைத்தேர்தலை சந்தித்தால், அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய தயார் என தூயசக்தி முதலமைச்சர் விஜய் கூறியதாக பகிரங்கப்படுத்தினார். கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால் இந்த பேட்டி முக்கிய ஆவணமாக கருதப்படும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி .தினகரன் தடுத்தும் அவரது பேச்சை மீறி, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தவெக பக்கம் தாவினார்.இங்கே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியும் அக்கட்சியின் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் மறுத்துள்ளனர். தலைமைக்கு அவ்வளவுதான் மரியாதை. தங்கள் பேச்சை கேட்க தங்களது MLAக்கள் தயாராக இல்லை என்பதை அறிந்து அக்கட்சியின் முதன்மை செயலாளர் என்பவர் பொதுக்குழுவிற்கே செல்லவில்லை. இதுதான இவர்களின் அரசியல் அக்கறை. இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வைகோ பேட்டியில் சொன்னது என்ன?
சென்னையில் நேற்று வைகோ அளித்த பேட்டியில், “ எங்களது சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள் என முதல்வர் விஜய் என்னிடம் சொன்னார். ஆனால் நான் முடியாது என்று மறுத்தேன்.
அதற்கு, “நீங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்.. அவர்களை வெற்றி பெற வைப்பது எனது கடமை” என முதல்வர் விஜய் என்னிடம் கூறினார். இதனையடுத்துதான் 2 எம்.எல்.ஏ.களிடம் ராஜினாமா பற்றி பேசினேன்” என கூறினார்.
இதனையே சென்னையில் நேற்று நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவிலும் வைகோ பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
