திமுகவுடனான கூட்டணி தொடர்பாக வரும் 27-ஆம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழுவில் விவாதித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேட்டமலை பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை வைகோ இன்று (ஜூன் 13) தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
கடந்த ஒரு மாத கால தவெக ஆட்சி அருமையாக உள்ளது.
குற்றச் சம்பவங்கள் பல ஆண்டுகளாக எல்லா ஆட்சி காலத்திலும் நடந்துகொண்டே இருக்கின்றன. அப்படிச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்கின்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு அந்தச் சட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். அத்தகைய நபர்களை நீதிபதிகள் ஜாமீனில் விடவே கூடாது. அப்படி வாழ்நாள் முழுவதும் ஜெயிலில்தான் இருக்க வேண்டும் என்கின்ற நிலைமை ஏற்பட்டால்தான், இந்த மிருகங்களுக்கு கொஞ்சம் பயம் வரும். அனைத்து ஆட்சி காலத்திலும் நடக்கிறது இந்த குற்றங்கள். இந்த ஆட்சியின் 30 நாட்களுக்குள் ஏதாவது நடந்திருக்கிறதா? எல்லா ஆட்சியிலும் தான் மிருகங்களைப் போல உலவுகிறார்கள். அதற்கு இந்த அரசு பொறுப்பல்ல.
தவெக கூட்டணி பற்றி வைகோ (VAIKO)
நாங்கள் இருக்கிற கூட்டணியைப் பற்றி (திமுக கூட்டணி) யோசிக்கவே இல்லையே. நீங்க உள்ளாட்சித் தேர்தலுக்குத் தாவிப் போயிட்டீங்களே..
திமுகவுக்கு (DMK) விசுவாசமாக இருந்தோம்
நாங்க எவ்வளவு விசுவாசமாக இருந்து திமுகவுக்குப் பாடுபட முடியுமோ, பாடுபட்டு, இந்த சாத்தூர் தொகுதியில கூட, நாங்க கடுமையான பிரச்சாரம் செய்து திமுகவை ஜெயிக்க வச்சவன் நான். மற்ற கட்சிகள் முடிவெடுத்து ஆட்சியோட சேர்ந்திருக்காங்க. நாங்க எந்த முடிவும் எடுக்கவில்லை.
பழிதூற்றும் திமுகவினர்..
சமூக வலைதளங்களில் திமுகவைச் சேர்ந்தவங்க காரணமில்லாமல் எங்களை நிந்திப்பது, எங்க மேல பழி தூற்றுவதற்கு நாங்க அதுக்குக் கவலைப்படவில்லை. இதுக்கெல்லாம் நாங்க பழக்கப்பட்டுப் போனவங்க. நாங்க எதுவும் பேசவில்லை.. நான் எதுவும் ஒரு வார்த்தை பேசல. டாக்டர் கலைஞரைப் பற்றி, கருப்புக்கொடிப் போராட்டத்துல கூட திருவள்ளுவருக்கு அவர் செய்த பெருமைகளைப் பற்றி 10 நிமிஷம் பேசுனேன். ஆகவே, நாங்க ஒன்னும் அவசரப்படவில்லை.
மதிமுக பொதுக்குழுவில் முடிவு
ஜூன் 27-ஆம் தேதி பொதுக்குழு கூடி எல்லா நிலமைகளையும் பேசுவோம். அங்கு கருத்துக்கள் பரிமாறப்படும். அதற்குப் பிறகுதான் எங்க நிலைப்பாடு என்ன என்பது வெளியிலே சொல்லப்படும். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
