திமுக மகளிர் அணி கூட்டத்துக்கு வந்த அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன், உடனே திரும்பி சென்றது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திமுக மகளிர் அணி கூட்டம் இன்று (ஜூன் 13) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் கலந்துகொண்டு, தவெக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
ஆனால் திமுக பொதுச்செயலாளரான துரைமுருகன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கு வரை வந்த துரைமுருகன், அங்கிருந்த கூட்டத்தை பார்த்துவிட்டு உடனே திரும்பிவிட்டார்.
இந்தசூழலில் பொதுச்செயலாளர் துரைமுருகனை மூத்த நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால் தான் அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார் என செய்திகள் பரவியது.
ஆனால், அண்ணா அறிவாலயத்திலிருந்து வெளியே வந்ததும் காரில் ஏறி அமர்ந்த துரைமுருகனிடம், அங்கிருந்த ஒருவர், ’கனி அக்கா உங்களை கேட்டாங்க’ என்று சொல்ல…
இதற்கு அவர், ’என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு? இன்பெக்ஷன் ஆயிடும். கூட்டமா இருக்க இடத்துக்கு போகக்கூடாதுன்னு சொல்லிருக்காரு டாக்டர்’ என கூறிவிட்டு புறப்பட்டார்.
அதுபோன்று திமுக ஐடி விங் அளித்த விளக்கத்தில், ”மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்படுவதை தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை பொதுச் செயலாளர் தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
காணொளிகளை வெட்டி ஒட்டி, தாமாகவே ஒரு பொய்க் கதையை உருவாக்கி செய்தியாக வெளியிடுவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.
நடைபெறாத ஒரு விஷயத்தைத் திணித்து, இது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை இட்டுக்கட்டி வெளியிடுவதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடக தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
