எம்எல்ஏக்களை மட்டுமல்ல.. தண்ணீர் வாங்குவதிலும் கவனம் காட்டுங்க” – உதயநிதி ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay Udhay

தமிழக முதல்வர் விஜய் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய காவிரித் தண்ணீரை வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் 28 மாவட்டங்கள் காவிரி நீரை நம்பி உள்ளன. மாநிலத்தின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் 50 விழுக்காட்டிற்கு காவிரி நீர்தான் ஆதாரமாக விளங்கி வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த ஆண்டு கர்நாடகாவில் போதிய அளவு மழை பெய்யாததாலும், அணைகளில் போதிய அளவு நீர் இல்லாததாலும் தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்கும் நிலையில் நாங்கள் இல்லை என்றும், காவிரி நீர் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை என்றும் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். இது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும், ‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT

ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.

இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.

ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.

எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share