தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக செயல்பட்ட எ.வ.வேலு மீது அறப்போர் இயக்கம் ஊழல் புகார் அளித்தது. அதில், ‘திருப்பூர், கரூர் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்த பணி மேற்கொள்ளாமலேயே பல கோடி ரூபாய் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு ஊழல் நடந்துள்ளது’ என்று கூறியிருந்தது
இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை எ.வ.வேலு மீது வழக்கு பதிவு செய்து அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டது.
இதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியது.
ஆனால் உடல்நல பாதிப்பு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வருகிறார் எ.வ.வேலு.
இந்த சூழலில் தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த எஃப் ஐ ஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் முன்னாள் அமைச்சர் வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
