தனக்கு நோபல் பரிசு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், ‘நாங்கள் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்து விட்டோம் என்று சொல்வதற்கு அதிகாரப்பூர்வமாக எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. திமுக கூட்டணியில் இருப்பதாகவே உணர்கிறோம்’ என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், ‘வார்த்தை விளையாட்டு விளையாட இது விஜய் டிவியோ சன் டிவியோ நடத்தும் நிகழ்ச்சி அல்ல’ என்று பதிலளித்திருந்தார்.
அதுபோன்று திருமாவளவன் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ”நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து… அவ்வளவுதான்” என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் விசிக பொருளாளர் எஸ்.எஸ் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில், ”மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் தலைவர்களும் இருக்கிறார்கள். பிறரை இழுத்து பழித்து புரளி பேசும் சில தலைவர் (???) களும் இருக்கிறார்கள்” என்று விமர்சித்திருந்தார்.
மற்றொரு பதிவில், என் தலைவர் திருமாவளவன் நோபல் பரிசுக்கு தகுதியானவர்தான். ஒரு போதும் கோயபல்ஸ்க்கு தகுதி பெற மாட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று (ஜூலை 8) அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் வைகோவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், ‘எங்கள் கட்சியிலிருந்து ஒருவரை சேர்த்துக் கொண்டார்கள் என்பதற்காக நாங்கள் திமுகவுக்கு எதிராக பேசவில்லை.
தேசிய அளவில் பிஜேபிக்கு எதிரான ஒரு அணியை கட்டமைக்க வேண்டும். அந்த அணியில் திமுகவும் தமிழக வெற்றி கழகமும் இருக்க வேண்டும். இதுதான் என்னுடைய பார்வை.
இதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் புரிந்து கொள்ள முடியாது. நான் குழப்புகிறேன் என்பார்கள்.
நோபல் பரிசு கொடுக்கலாம் என்ற வைகோவின் பரிந்துரைக்கு நன்றி. நோபல் பரிசு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன்” என்று பதிலளித்தார்
