17-வது தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி முகாமை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (ஜூன் 16) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்றும் நாளையும் (ஜூன் 16, 17) இந்தச் சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இம்முகாமில், சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், மரபுகள் மற்றும் சபையின் நடைமுறைகள் குறித்து அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
குறிப்பாக, சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எவற்றைப் பேச வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும், அவையின் மாண்பை எங்ஙனம் காக்க வேண்டும் போன்ற முக்கிய வழிமுறைகளை மக்கள் பிரதிநிதிகள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் விருப்பப்பட்டால் பயிற்சியில் பங்கேற்கலாம். அவர்கள் பயிற்சியில் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். முதல் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர், சட்டப்பேரவைக் குழுக்கள் அமைக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
