த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறப்படும் வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்ட நிலையில் இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராக வில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அமல்ராஜிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “தவெக ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால், ரூ.35 கோடி வரை தருவதாகத் திமுக தரப்பில் பேரம் பேசப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், தவெக ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் சம்மன் மற்றும் லுக் அவுட் நோட்டீஸ்:
இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகிய இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் பிறப்பித்தனர். கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவர்களின் பூர்வீக வீட்டிற்குச் சென்ற தனிப்படை போலீசார், பெற்றோர்களான வேலுச்சாமி மற்றும் பழனியம்மாளிடம் இந்தச் சம்மனை வழங்கினர். மேலும், இருவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் திருவல்லிக்கேணி போலீசார் ‘லுக் அவுட்’ (Look-out) நோட்டீஸையும் அனுப்பியிருந்தனர்.
இன்று ஆஜராகவில்லை
காவல்துறை அனுப்பிய சம்மனின்படி, அவர்கள் இருவரும் இன்று காலை 10:30 மணியளவில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதன் காரணமாக, அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
