டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி (Senthil Balaji), முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு கேவியட் மனு (Caveat Petition) தாக்கல் செய்திருக்கிறது.
தமிழக அரசின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக்கில் (TASMAC) 2021-2025 ஆம் ஆண்டுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சில தனிநபர்கள், மதுபான ஆலைகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் மீது கடந்த ஜூலை 28-ந் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சொந்தமான 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் பெருமளவிலான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக காவலில் வைத்து விசாரணை நடத்துவது அவசியம் என கூறி செந்தில் பாலாஜி மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் இன்று ஜூலை 30-ந் தேதி டிஸ்மிஸ் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி, முன்ஜாமீன் கோரி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோத்தகி முறையிட்டனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கினை ஜூலை 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பட்டியலிட ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்டு உத்தரவி பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
