அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் வெளியேறி விட்டதாக கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் இடம்பெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட நான்கு தொகுதிகளை அதிமுக தலைமையிடம் புரட்சி பாரதம் கேட்டது. ஆனால் ஒரு சீட்டு தான் புரட்சி பாரத கட்சிக்கு வழங்கப்பட்டது.
கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், அவர் தோல்வியை தழுவினார்.
இந்தநிலையில் சென்னை தியாகராய நகரில் இன்று (ஜூலை 30) 2026-2027 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிழல் பட்ஜெட்டை புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், ”நாங்கள் தேர்தலோடு சரி, அதற்குப் பிறகு கூட்டணியில் நீடிப்பது பற்றிப் பேசவில்லை. தேர்தல் முடிந்ததும் கூட்டணியும் முடிந்தது, அவ்வளவுதான். தேர்தல் முடிவடைந்த பிறகு எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. இப்போதைக்கு எந்த கூட்டணியிலும் இடம்பெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் விலகின என்பது குறிப்பிடத்தக்கது.
