டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன் ஜாமின் மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து நேற்று அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை, முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இதை இன்று (ஜூலை 30) விசாரித்த நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கில் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என கூறி செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.
இதனால் எப்போது வேண்டுமானாலும் செந்தில் பாலாஜி கைதாகலாம் என்று கூறப்படும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்துள்ளார்.
தலைமை நீதிபதி சூர்யா காந்த் முன்னிலையில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி மற்றும் மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராகி, ”இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று வாய்மொழியாக தெரிவித்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மனுவில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதைச் சரிசெய்யும்படியும், வழக்கினை நாளை விசாரணைக்குப் பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.
