நீட் விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் தவெக கொள்கை, நிலைப்பாடுதான் என்ன? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக ஆளூர் ஷா நவாஸ் கூறியுள்ளதாவது: திராவிடர் கழகம் நடத்த இருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்திற்கு தடைவிதித்து, பெரியார் திடலில் காவல்துறையை குவித்துள்ளது தவெக அரசு. இது கடும் கண்டனத்திற்கு உரியது.
தி.க.வின் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் என்பது ஏதோ இப்போது மட்டும் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போதும், திமுக ஆட்சியின் போதும் பலமுறை இப் பரப்புரை நடைபெற்றுள்ளது. ஆசிரியர் கி.வீரமணி அவர்களே தமிழ்நாடு முழுவதும் பயணித்து பரப்புரை செய்துள்ளார். அப்படி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றுள்ளேன்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கும் திமுகவுக்கும் நீட் எதிர்ப்பு எப்படி கொள்கை முடிவோ, அப்படித் தான் இப்போது ஆட்சியில் உள்ள தவெகவுக்கும் நீட் எதிர்ப்பு என்பது கொள்கை முடிவு என்று சொன்னார்கள். அந்தக் கொள்கையை வலியுறுத்தித் தான் தி.க பரப்புரை செய்கிறது. அந்தப் பரப்புரையை அன்று எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலின் அனுமதித்து இருக்கும் போது, இன்று முதல்வர் விஜய் மட்டும் தடுப்பது ஏன்?

நீட் விலக்கும், நீட்எதிர்ப்பும் தமிழ்நாட்டின் கொள்கை. அது தவெகவின் கொள்கையா இல்லையா? இவ்வாறு ஆளூர் ஷா நவாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
