மேகதாது மட்டுமல்ல, விவசாயிகள் மற்றும் தமிழக மக்கள் நலன்கள் பாதிக்கப்படுவதற்கு தவெக ஒருபோதும் இடம் கொடுக்காது என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே முதலமைச்சர் மேகதாது அணை விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன. அதற்கு எந்தப் பதிலும் இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து தவெக ஐடி விங் தனது எக்ஸ் பதிவில், “மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே?
தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.
ஆட்சியில் இருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே.
யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது.
மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
