தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இணையவிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மீண்டும் கட்சி ஒன்றிணைய வேண்டும் என நான்கு ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.
அது பயனளிக்காத நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் திமுகவில் இணைந்தார். போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாகவும், தனது மகன் ரவீந்திரநாத் அழுத்தத்தின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை தற்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மறுத்துள்ளார்.
நியூஸ் 18 தமிழ் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இது தவறான தகவல். நான் ஒரு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இன்னொரு கட்சியில் சேர்ந்து தற்போது எம்எல்ஏவாக இருக்கிறேன். எனவே தற்போது வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.
