நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகன பரப்புரை பயணத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் திராவிடர் கழகத்தின் தலைமையகமான சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

”நீட் தேர்வை ஒழிப்போம்! என்ற முழக்கத்துடன் பொதுமக்களிடம் பிரசாரம் செய்யும் வகையில், ஜூலை 30, 31, ஆகஸ்ட் 1, 2 ஆகிய 4 நாட்கள், தமிழ்நாட்டின் 6 முனைகளிலிருந்து இரு சக்கர வாகனப் பரப்புரை நடைபெறும்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த இருசக்கர வாகனப் பேரணிக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்துள்ளனர். அத்துடன் சென்னையில் தி.க. தலைமை அலுவலகமான பெரியார் திடலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இதனையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருந்த இருசக்கர வாகன பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
