நாட்டில் நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்த அறிக்கை விவரம்: இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின்படி, காவல்துறை மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை மாநில அரசுகளின் கீழ் உள்ள துறைகளாகும்.
இருப்பினும், இடதுசாரித் தீவிரவாதத்தால் (Left Wing Extremism – LWE) பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வழங்கி வருகிறது. இடதுசாரித் தீவிரவாத அச்சுறுத்தலை முழுமையான முறையில் எதிர்கொள்ள, “இடதுசாரித் தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம்” (National Policy and Action Plan to address LWE) 2015 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையை மையமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், வளர்ச்சித் தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை உறுதி செய்தல் உள்ளிட்ட பல முனைகளைக் கொண்ட உத்தி இது.
இடதுசாரி தீவிரவாதம் இல்லை
60 ஆண்டுகால வன்முறைக்குப் பிறகு, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகக் கருதப்பட்ட இடதுசாரித் தீவிரவாதத்திலிருந்து நாடு தற்போது முழுமையாக விடுபட்டுள்ளது.
“இடதுசாரித் தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான 2015 தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை” உறுதியுடன் நடைமுறைப்படுத்தியதாலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளாலும் இது சாத்தியமாகியுள்ளது. தற்போது எந்தவொரு மாவட்டமும் இடதுசாரித் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக வகைப்படுத்தப்படவில்லை.
நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2018 ஏப்ரலில் 126 ஆக இருந்தது, 2021 ஜூலையில் 70 ஆகவும், 2024 ஏப்ரலில் 38 ஆகவும், 2025 டிசம்பரில் 8 ஆகவும் குறைந்து, 2026 மார்ச்/ஏப்ரல் மாதத்தில் பூஜ்ஜியமாக மாறியுள்ளது.
தற்போதைய நிலையில் நாட்டின் 37 மாவட்டங்கள், இடதுசாரித் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவை அல்ல என்றாலும், சிறிது காலத்திற்கு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்பான தொடர்ச்சியான ஆதரவு தேவைப்படுகிறது. இடதுசாரித் தீவிரவாத வன்முறை நடவடிக்கைகள் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, அவற்றின் அமைப்பு ரீதியான கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்பட்ட மாவட்டங்கள் உள்ளன.
பாதுகாப்புத்துறையைப் பொறுத்தவரை, இடதுசாரித் தீவிரவாதத்தால் முன்னர் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, மத்திய ஆயுதப் காவல் படைகளை வழங்குதல், ரிசர்வ் படைகளை உருவாக்குதல், ஹெலிகாப்டர் ஆதரவு, பாதுகாப்பு முகாம் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், பயிற்சி அளித்தல், மாநில காவல்துறை படைகளை நவீனமயமாக்குவதற்கான நிதி, ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், உளவுத்துறை தகவல்களைப் பகிர்தல், காவல் நிலையங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் மத்திய அரசு உதவி செய்கிறது.
இடதுசாரித் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ. 3805.04 கோடி விடுவிக்கப்பட உள்ளது.
மத்திய அரசும் மாநில அரசுகளும் விரிவான சரணடைதல்-மற்றும்-புனர்வாழ்வுக் கொள்கைகளை வகுத்துள்ளன. பாதுகாப்புத் தொடர்பான செலவினத் திட்டத்தின் (SRE Scheme) ஒரு பகுதியாக, ‘சரணடைதல்-மற்றும்-புனர்வாழ்வுக் கொள்கை’ மூலம் மாநிலங்களின் இந்த முயற்சிக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது.
இடதுசாரித் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் சரணடைந்தவர்களின் புனர்வாழ்வுக்காக ஏற்படும் செலவை மத்திய அரசு திரும்ப வழங்குகிறது. இந்த புனர்வாழ்வுத் தொகுப்பில், உயர் பதவி வகித்த இடதுசாரித் தீவிரவாத கேடர்களுக்கு உடனடி உதவியாக ரூ. 5 லட்சமும், பிற இடதுசாரித் தீவிரவாத கேடர்களுக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்கப்படுகிறது. இது தவிர, ஆயுதங்கள்/வெடிமருந்துகளைச் சமர்ப்பிப்பதற்கான ஊக்கத்தொகைகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ. 10,000/- உதவித்தொகையுடன், அவர்கள் விரும்பும் தொழில்/வேலையில் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளும் உள்ளன.
இடதுசாரித் தீவிரவாதிகளின் நிதி ஆதாரங்களைத் துண்டிப்பதற்கும், மாவோயிஸ்டுகள் மற்றும் நிதி ஆதரவாளர்களுக்கு இடையேயான தொடர்பைக் கண்டறிவதற்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இடதுசாரித் தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்ட நிதி மற்றும் வளங்களைத் தடுத்து நிறுத்துவதில் மத்திய ஏஜென்சிகளுடன் இணைந்து மாநிலக் காவல்துறை மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பெரும் பலனைத் தந்துள்ளன.
இடதுசாரித் தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அஞ்சல்துறை மூலம் வங்கிச் சேவைகளுடன் கூடிய 6,025 அஞ்சல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பகுதிகளில் 1804 வங்கி கிளைகளும் 1321 ஏடிஎம்களும் திறக்கப்பட்டுள்ளன.
இடதுசாரித் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இடதுசாரித் தீவிரவாதம் இல்லாத பகுதிகளில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் மூன்றில் ஒரு பங்கு முகாம்கள் ‘ஜன் சுவிதா கேந்திராக்களாக’ மாற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
