திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டது.
அதில் வெற்றி பெற்ற பின், தமிமுன் அன்சாரி மற்றும் அக்கட்சியினர் அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 6) திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
அப்போது வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறித்து கேட்டறிந்துள்ளார் ஸ்டாலின்.
இதைத்தொடர்ந்து தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நாங்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் நீங்கள் தோற்றது வருத்தமாக உள்ளது. வேண்டுமானால் சிதம்பரம் தொகுதியில் நாங்கள் ராஜினாமா செய்கிறோம். நீங்கள் அங்கு நின்று வெற்றி பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
இதற்கு மு.க.ஸ்டாலின், எனது கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு, “அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லக்கூடாது, நீங்கள் சட்டமன்றத்திற்குள் சென்று சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உரிமையோடு கண்டித்தார்.
20 முதல் 25 வரை அவருடன் பேசினோம். அப்போது துர்கா ஸ்டாலின், பிரேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
எங்களுடைய வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியவில்லை” என்று கூறினார்.
மேலும் தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தது பற்றிய கேள்விக்கு, கடந்த 15 ஆண்டுகளாகப் பல சோதனைகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்குத் தூணாக இருந்தவர் மு.க.ஸ்டாலின். இந்த நேரத்தில் காங்கிரஸ் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சோதனை காலத்தில் தங்களுக்குத் துணையாக நின்ற திமுகவையும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் காங்கிரஸ் மறப்பது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார்.
