தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை மே 7-ந் தேதி முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில்தான் வென்றது. ஆனால் மெஜாரிட்டிக்கு தேவை 118 எம்.எல்.ஏக்கள். தற்போதைய நிலையில் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆளுநர் அர்லேகரை விஜய் இன்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக எம்.எல்.ஏக்கள் பட்டியலை ஆளுநர் அர்லேகரிடம் விஜய் கொடுத்தார்.
ஆனால் ஆளுநர் அர்லேகர், “நீங்க ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தரும் 118 எம்.எல்.ஏக்களின் பட்டியலையும் முழுமையாக கொடுங்க”ன்னு கேட்டிருக்கிறார்.
இதற்கு, “முதல்வராக பதவியேற்ற பின்னர் 14 நாட்களில் அந்த கடிதத்தைக் கொடுத்துவிடுவோம்” என விஜய் பதில் சொன்னார்.
ஆனால் ஆளுநர் அர்லேகர், “எடியூரப்பா தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் ஆட்சி அமைக்கும் போதே ஆதரவு தரும் மெஜாரிட்டிக்கான எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை ஆளுநரிடம் கொடுக்கனும்.. அப்படி கொடுக்காமல் இருந்தால் ‘குதிரை பேரத்துக்குதான்’ வழிவகுக்கும்னு கண்டிப்பா சொல்லி இருக்குது.. அதனால நீங்க ஆட்சி அமைக்க ஆதரவு தரும் 118 எம்.எல்.ஏக்கள் பட்டியலையும் கொடுங்க”ன்னு அழுத்தமாகவே சொல்லி இருக்கிறார்.
ஆட்சி அமைக்க ஆதரவு கோரி விஜய் கடிதம் எழுதிய இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாளைதான் முடிவெடுக்கப் போவதாக சொல்லி இருக்கின்றனர். இதனால் இந்த கட்சிகளிடம் முன்கூட்டியே ‘ஆதரவு கடிதம்’ பெற்றி ஆளுநரிடம் தர முடியுமா? என்ற முயற்சியில் தவெக தரப்பு மிக தீவிரமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
இடதுசாரிகள், விசிகவின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநர் அர்லேகரிடம் கொடுத்தால்தான் விஜய் நாளை மே 7-ந் தேதி முதல்வராக பதவியேற்க முடியும் என்பதுதான் தற்போதைய நிலை.
