திமுக ஆட்சியின் மூன்றாண்டு காலத்தில் விவசாயிகளுக்கு 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (நவம்பர் 28) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட, இந்தியாவிலேயே முதன் முறையாக 1989 – 1990 ஆண்டில் உழவர்களுக்கு இலவச மின்சாரத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் கலைஞர்.
தொலைநோக்குப் பார்வையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தால் தமிழ்நாட்டின் கிராமங்கள் துரித வளர்ச்சியை அடைந்தன. விவசாய நிலப்பரப்பு விரிவடைந்தது. விவசாயிகள் தன்னிறைவு பெற்றனர்.
2010-2011-ஆம் ஆண்டு காலத்தில் ஒரே ஆண்டில் 77,158 இலவச வேளாண் மின் இணைப்புகளைக் கொடுத்துச் சாதனை படைத்தார் கலைஞர். அந்தச் சாதனைகளின் அடிச்சுவட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகளைக் கொடுத்துப் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. அதற்காக மின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2016 – 2021 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் உழவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 1,38,592 மட்டுமே. ஆனால், திமுக ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையைக் கடந்து 1,69,564 புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது.
வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக திட்டங்களைத் தீட்டி அக்கறையோடு செயலாற்றிவரும் ஸ்டாலின் ஆலோசனைகளால் வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
இதனால், 3,38,380 ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருக்கின்றன. உழவர்களின் உண்மைத் தோழனாக ஸ்டாலின் சாதித்துக் காட்டியிருக்கிறார். உழவர்களின் உள்ளத்தை வென்றிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
எஸ்.பி.பி-யின் ஏஐ குரலை பயன்படுத்த சரண் தடை: காரணம் என்ன?
மருத்துவமனையில் சிகிச்சை… ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நலம் விசாரித்த ஸ்டாலின்