கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 10) தள்ளுபடி செய்தது.
2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றி கழக வேட்பாளரை 2271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரகாசம் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, ”மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 81, ஒரு வாக்காளர் எந்த தொகுதி தேர்தலையும் எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை.
எந்த தொகுதி தேர்தலை எதிர்த்து யார் வேண்டுமானாலும் வழக்கு தொடர அனுமதித்தால், அது தேவையில்லாத குழப்பத்தை உருவாக்கும். ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் ஏராளமான தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்துவிடும்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த மனுதாரர் பிரகாசம் கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளரும் அல்ல வாக்காளரும் அல்ல என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்தார்.
