தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திற்கு நேற்று (மார்ச் 12) எஸ்பிஐ வங்கி அனுப்பிய நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று (மார்ச் 13) எஸ்பிஐ வங்கி பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்று கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்பிஐ வங்கி மார்ச் 6-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கி ஜூன் 30 வரை கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மார்ச் 12-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை சமர்ப்பிக்க எஸ்பிஐ வங்கிக்கு கெடு விதித்தது.
மேலும், மார்ச் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம் நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில், தேர்தல் பத்திரங்கள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் நேற்று (மார்ச் 12) எஸ்பிஐ வங்கி சமர்ப்பித்ததாக தேர்தல் ஆணையம் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
அதில், “தேர்தல் ஆணையத்திற்கு பென்டிரைவில் இரண்டு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் விவரங்கள், வாங்கிய தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்பு ஆகியவை ஒரு கோப்பிலும், பத்திரங்களை பணமாக்கிய அரசியல் கட்சிகளின் விவரங்கள் இரண்டாவது கோப்பிலும் உள்ளது.
01.04.2019 முதல் 15.02.2024 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 22,217 பத்திரங்கள் வாங்கப்பட்டன. இதில் 22,030 பத்திரங்கள் பணமாக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Heatwave: சூரியனின் கரிசனம் ‘இந்த’ மாவட்டங்கள்ல ரொம்பவே அதிகம்!
செந்தில் பாலாஜி மீதான ED விசாரணைக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்!