செம்மரக் கடத்தல் விவகாரத்தில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் உறவினர் பாஸ்கர் சென்னைஅண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் ஜெயா தொலைக்காட்சியின் உரிமையாளர் விவேக்கின் மாமனார் ஆவார்.
சென்னையில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் இவர் மீது செம்மரக் கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று இரவு 9 மணியளவில் அண்ணா நகரில் உள்ள பாஸ்கரன் வீட்டில் இருந்து அவரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
நள்ளிரவில் இருந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டு இறுதியில் பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கலை.ரா
