சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் போது ஏற்பட்ட தகராறில், மூதாட்டி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்துள்ள அமரகுந்தி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர், தனது சொந்த நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிணற்றில் இருந்து மண் துகள்கள் புகையாக வெளியேறியதாகத் தெரிகிறது. இதனால் அருகில் வசிக்கும் தவெக நிர்வாகி முத்தண்ணன் என்பவர், தங்கள் பகுதியில் புகை அதிகமாக வருவதாகக் கூறி அருணாச்சலம் மற்றும் அவரது மனைவி வசந்தாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்தண்ணன், அருணாச்சலத்தின் மனைவி வசந்தாவின் முடியைப் பிடித்து இழுத்துத் தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அருணாச்சலத்தின் உறவினர்கள் முத்தண்ணனைத் தாக்க முயன்றனர். உடனடியாக முத்தண்ணன் தனது ஆதரவாளர்களை அங்கு வரவழைத்துள்ளார்.
அங்கு திரண்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான முத்தண்ணனின் ஆதரவாளர்களும் தாக்குதலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.
