கரூர் பெருந்துயரச் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாதான் முக்கிய குற்றவாளி என்றும், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கரூர் சம்பவத்தில் கணக்கு வழக்கை முடிக்காமல் விடமாட்டோம். எங்க தலைவரை (முதல்வர் விஜய்) கரூரில் கை வைத்தீர்கள்; எங்க மக்கள் மீது கை வைத்தீர்கள் தானே ஸ்டாலின் அவர்களே! உதயநிதி வாழ்க்கைக்காக எங்களுடைய மக்களைக் காவல்துறை மூலமாகக் கொன்று குவித்தீர்களே, அதற்கான பதில் ஒரு நேரத்தில் நடக்கும்” என்று பேசினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: “கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா தான் மெயின் அகயூஸ்ட் ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும்
அதிமுகவை சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களை ஆளும் கட்சியில் இணைக்கும் விழாவில் பொறுப்பற்ற முறையில் பேசியது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆத்திரம் ஏற்படக்கூடிய வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசி இருக்கிறார். கரூரில் நடைபெற்ற சம்பவத்தை பற்றி அவர் பொய்யும் புரட்டுமாக பேசி உள்ளார். கரூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் ஆளும் கட்சியிலே சேர்ந்துவிட்ட காரணத்தினால் கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. அந்த தொகுதி மக்களுடைய கவனத்தை திசை திருப்புகிற நோக்கத்தில் நேற்று அவ்வாறு பேசியிருக்கிறார்.
கரூர் சம்பவத்தின் போது எங்கள் தலைவர் தளபதி எடுத்த நடவடிக்கையை மனசாட்சி உள்ளவர்கள், அரசியல் தெரிந்தவர்கள், நாகரீகம் அறிந்தவர்கள் என அத்தனை பேருமே பாராட்டினார்கள். விஜய் அவர்களைப் போல 41 பேர் இறந்த போது முகத்தை மூடிக்கொண்டு ஓடி போய் ஒளிந்து கொள்ளவில்லை. எங்கள் தலைவர் அன்று மக்களோடு துணை நின்றார். உயிர்களை காப்பாற்ற என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எல்லாம் உடனடியாக எடுத்து மக்களின் உயிரைக் காப்பாற்றிய ஒரே தலைவர் எங்கள் தலைவர் தளபதி என்பதை அந்த பகுதி மக்களும் மறக்க மாட்டார்கள் தமிழ்நாடும் மறந்திருக்காது.
கரூர் வழக்கை விசாரிப்பதற்கு SIT அமைத்து அதன் தலைவராக யாரை அன்று நாங்கள் நியமித்தோமோ அதே காவல்துறை அதிகாரியை தான் இன்று மிக முக்கிய பொறுப்பான உளவுத்துறை ஐஜி ஆக நியமித்து உள்ளனர். ஆக நடுநிலையோடு தான் கடந்த திமுக அரசு நடந்து கொண்டது என்பதற்கு இதுவே சாட்சி. நாங்கள் அமைத்த SIT குழுவின் விசாரணை ஒழுங்காக நடைபெற்றது. ஆனால் இவர்களே சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டார்கள். சிபிஐ விசாரணையும் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விவகாரதத்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர் நேற்றைக்கு பேசிய ஆதவ் அர்ஜுனா. அவர் தான் மெயின் அக்யூஸ்ட் அக்யூஸ்ட் லிஸ்ட்டில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா நேற்றைக்கு சட்டம் தெரியாமல் நீதிமன்ற நடவடிக்கை புரிந்து கொள்ளாமல் பேசிக்கொண்டு உள்ளார். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதியுடைய தலைமையில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணைக்கு விஜய் இரண்டு முறை போயிட்டு வந்தார். புஸ்ஸி ஆனந்த் நிர்மல் குமார், முதல்வரின் தனி செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஜெகதீஷ், ஆதவ் அர்ஜூனா என இவர்கள் எல்லாம் A1,A2, A3.. என அக்யூஸ்ட் லிஸ்ட்டில் உள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்கிற போது வழக்கை பற்றி ஒரு அக்யூஸ்ட், வழக்கின் விசாரணையை கெடுக்கிற வகையில் நேற்றைய தினம் பேசி இருக்கிறார். ஆகவே இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம். அதேபோல அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர உள்ளோம்.
இந்த ஆதவ் அர்ஜுனாவுடைய ஆட்டத்துக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய் கொண்டுள்ளது. அவர் யார் என்பது இந்த நாட்டுக்கு தெரியும். இந்த நாட்டையே திவாலாக்கும் லாட்டரி குடும்பத்தை சார்ந்தவர். இவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மீது கேரளாவில 928 கோடிக்கு லாட்டரி சீட்டு ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இவருடைய மனைவி அந்த வழக்கில் ஒரு அக்யூஸ்ட். இவர் இந்த வழக்கில் ஒரு அக்யூஸ்ட். இப்படிப்பட்ட அக்யூஸ்ட்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொண்டு எங்களை குற்றம் சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களுக்கு உரிய வகையிலே சட்டரீதியாக நாங்கள் பதில் சொல்வோம் நடவடிக்கை எடுப்போம்.
முன்னாள் அமைச்சர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் அவரது தொகுதியிலே ஆய்வுக்கு போகிற போது கைது செய்திருக்கிறார்கள் என்றால் இது சர்வாதிகாரத்தின் உச்சம் இதை நிச்சயமாக சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம்.
இந்த அராஜகத்தை எல்லாம் மிக விரைவில் நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம். இந்த ஆட்சி எத்தனை நாளுக்கு என்பதை பொதுமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எந்தவிதமான ஆக்கப்பூர்வமான பணியும் இந்த ஆட்சியில் நடக்கவில்லை. தினமும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாவிதமான தவறுகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் கவனிப்பதற்கு இன்றைக்கு இருக்கிற ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை.
திமுக என்பது வெட்ட வெட்ட துளிர்க்கிற மரம் அரைக்க அரைக்க மணக்கிற சந்தனம் தீட்ட தீட்ட ஒளிர்கிற வைரம் என்பதை இன்றைக்கு புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிற புதியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.
