கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்த கருத்துகள் விவாதப் பொருளாகி இருக்கிறது.
கோவளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: கரூர் ரொம்ப முக்கியமான ஊர்.. அதுல ஒரு கணக்கு வழக்கு இருக்கு.. அந்த கணக்கு வழக்கை முடிக்காம விடமாட்டோம்.. முடிக்காம விடமாட்டோம்.. எங்க தலைவரை (முதல்வர் விஜய்) கரூரில் கை வெச்சீங்க.. எங்க மக்களை கை வைச்சீங்கதானே ஸ்டாலின் அவர்களே! உதயநிதி வாழ்க்கைக்காக.. எங்களுடைய மக்களை காவல்துறை மூலமாக கொன்று குவிச்சீங்களே.. அதற்கான பதில்.. அதற்கான பதில் ஒரு நேரத்தில் நடக்கும். இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
ஆதவ் அர்ஜூனா பேச்சு வீடியோ:
கரூர் சம்பவம் என்ன?
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி, கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர்- இன்றைய முதல்வர் விஜய் பங்கேற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
இந்த வழக்கு ஆரம்பத்தில் தமிழக அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வு குழு மற்றும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் மூலம் விசாரிக்கப்பட்டது.
பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு சிபிஐ (CBI) கைக்கு மாறியது. இந்த வழக்கில் தற்போதைய முதல்வர் விஜய், ஏற்கனவே டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சிபிஐ விசாரணை, தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.
கரூர் சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பனையூர் தவெக அலுவலகத்துக்கு அழைத்து சந்தித்து, தலா ரூ. 20 லட்சம் நிதியுதவியை விஜய் வழங்கினார்.
முதல்வர் விஜய் ஜூலை 10-ம் தேதி கரூர் பயணம் மேற்கொள்ளும்போது, பலியானோரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
