பொன்ராஜ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

Published On:

| By Pandeeswari Gurusamy

Ponraj

அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாகப் பேட்டியளித்த பெண்கள் குறித்து, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதுதொடர்பாக தற்போதைய அமைச்சர்கள் ராஜ்குமார் மற்றும் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் மார்ச் 26ஆம் தேதி அளித்த புகார்களின் அடிப்படையில், கடந்த மே 12ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கடலூர் போலீசாரும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்தனர்.

ADVERTISEMENT

இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சென்னை மாநகர காவல் ஆணையருக்கு விளக்கம் அளித்துக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து குறிப்பிட்ட அந்தப் பேட்டி நீக்கப்பட்டுவிட்டது. இச்சூழலில், புகார் அளிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பின்னரும், புகார்தாரர்கள் அமைச்சர்களான பிறகும், அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அந்த நேர்காணலில் சமூக அவலங்களை விமர்சிக்கும் வகையிலேயே தான் பதிலளித்ததாகவும், பெண் சமூகத்திற்கு எதிராக எந்தவொரு அவதூறு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கியிருந்தார். தனது பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் திரித்துக் கூறி இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த விவகாரம் தொடர்பாக தவெகவினர் சிலர் தனக்குத் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்தது தொடர்பாக அளித்த புகாரின் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தன் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

பொன்ராஜ் தரப்பு வாதம்

இந்த மனுக்கள் நீதிபதி ஜி. கேஇளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது பொன்ராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “ஏற்கனவே இது தொடர்பாக காவல்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகும், புகார்தாரர்கள் அமைச்சர்களான பிறகும் அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று வாதாடினார்.

ADVERTISEMENT

காவல்துறை வாதம்

மனுதாரர் ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு எதிராக பேசியுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், கடலூர் போலீசாரும் வரும் ஜூன் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதுவரை இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜூன் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share