மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் 1 லிட்டர் பெட்ரோல் (Petrol) ரூ.230க்கும் 1 லிட்டர் டீசல் ரூ190-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.5,000-க்கு விற்பனையாவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் கங்போக்பி மாவட்டத்தில்தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மிக மோசமாக உயர்ந்துள்ளன. இதற்கு காரணம், நாகா அமைப்பினர் அறிவித்துள்ள பொருளாதாரத் தடைதான்.
மணிப்பூரில் என்ன நடந்தது?
கடந்த மே 13-ந் தேதி கங்போக்பி பகுதியில் 18 நாகா இன மக்கள், மணிப்பூரின் குக்கி இனக் குழுவினரால் கடத்தப்பட்டனர். இதனைக் ‘யுனைடெட் நாகா கவுன்சில்’ (UNC) என்ற அமைப்பு மே 17-ந் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலை NH-02 வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் கடத்தப்பட்டவர்களில் 6 நாகா இனக்குழுவைச் சேர்ந்தவர்களின் உடல்கள் கடந்த ஜூன் 10-ந் தேதி மீட்கப்பட்டன. இதனால் மணிப்பூரில் நாகா மற்றும் குக்கி இனக் குழுவினரிடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இம்மோதலால் நாகா அமைப்பினர் விதித்த பொருளாதாரத் தடை தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
காணாமல் போன 6 நாகா இனத்தவரின் கொலையில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும்; குக்கி ஆயுதக் குழுக்களுடனான ‘போர் நிறுத்த ஒப்பந்தத்தை’ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை ‘பொருளாதாரத் தடை’ அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
