முதல்வர் விஜய் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இருந்து மங்களூர் விமான நிலையம் வரை தானே காரை இயக்கி வந்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றுவிட்டு திரும்பிய போது, கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் தரப்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கோயிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பிய முதல்வர் விஜய் வழக்கம் போல் காரில் ஏறினார். சற்று நேரத்தில், ’தானே காரை இயக்குகிறேன்’ என்று கூறி டிரைவர் இருக்கைக்கு மாறினார்.
கொல்லூரில் இருந்து மங்களூரு சர்வதேச விமான நிலையம் வரை உள்ள சுமார் 130 கிலோமீட்டர் தூரத்திற்கு தானே காரை இயக்கி வந்தார். அப்போது ஆங்காங்கே விஜய்யின் ரசிகர்களும் திரண்டிருந்தனர். அவர்களை நோக்கியும் கைகாட்டியவாறு காரை இயக்கினார்.
மேற்குத் தொடர்ச்சி மலைச் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் வழியே ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே காரை ஓட்டிச் சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல்வர் விஜய் பயணம் செய்த பாதை, மூகாம்பிகை வனப்பகுதியாகும். சவுபர்ணிகா ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இந்த வனப்பகுதி உள்ளது.
இதனால் அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் நபர்களை கண்காணிக்கும்படி, வனத்துறை ஊழியர்களுக்கு போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.
பின்னர் மங்களூரு விமான நிலையம் வந்த விஜய் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
