டாஸ்மாக் கடைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுடுகாடுகளுக்கு அருகில் வைத்தால் ஊருக்குள் சண்டை குறையும். அரசுக்கு வரும் வருமானமும் தடைபடாது என நடிகர் பார்த்திபன் முதல்வர் விஜய்க்கு யோசனை தெரிவித்துள்ளார்.
நடிகரும் தவெக தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முதல்வராக பதவியேற்றார்.
அதை தொடர்ந்து திரையுலகைச் சேர்ந்த பலரும் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் சமீபத்தில் தமிழக முதல்வர் விஜயைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வர் விஜய்யுடன் பேசியது குறித்து பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பள்ளி, கோயில் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை அரசு அப்புறப்படுத்துவது பாராட்டத்தக்கது. அதேநேரம் டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் வைக்காமல், ஒதுக்குப்புறமாக இருக்கும் இடுகாடு, சுடுகாடு அல்லது மின் மயானங்களின் அருகே அமைக்க வேண்டும். சிகரெட் மற்றும் மது பாட்டில்களில் மரண எச்சரிக்கை விடுப்பது போல, சுடுகாட்டின் அருகே டாஸ்மாக் கடை இருந்தால், ‘வாழ்க்கையின் கடைசி இடத்திற்கு நாம் முன்கூட்டியே வருகிறோம்’ என்ற பயம் குடிப்பவர்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும். கடைகளை அப்புறப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும்.
இதனால் அரசுக்கு வரும் வருமானமும் கெடாது; ஊருக்குள் பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் இடையூறுகளும் தகராறுகளும் குறையும் என்றேன். இந்த யோசனையை நான் நகைச்சுவையாக விவரித்தபோது, அதைக் கேட்டுச் சிரித்தார்” என தெரிவித்துள்ளார்.
