10 சதவீத இட ஒதுக்கீடு, ஆன்லைன் விளையாட்டு, 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் இன்று(டிசம்பர் 6)நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பிறகு திமுக எம்.பி. டி.ஆர். பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து கூட்டத்தில் விவாதித்தது பற்றி கூறினர்.
அப்போது பேசிய டி.ஆர்.பாலு, “திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், சென்னையில் இருக்கக்கூடிய 2 ஆவது மெட்ரோ பணி திட்ட அறிக்கை அனுப்பி 2 வருடங்கள் ஆகிறது.
மத்திய அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஒப்புதல் வழங்கவேண்டும். ஆனால் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. முக்கியமான உள் கட்டமைப்பு பணி என்பதால் உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.
உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது, எனவே அதுகுறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறோம்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏழைகள், மிக ஏழைகளாக மாறிவிடுகிறார்கள். வசதி படைத்தவர்கள் பணம், பொருளை இழந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் 30 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி விவாதிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.
அதேபோன்று ஆளுநரிடம் 22 மசோதாக்கள் உள்ளன. அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். அதுகுறித்து விவாதிக்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. அதைப்பற்றியும் விவாதிக்கவேண்டும். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவித்தார்கள்.
8 ஆண்டாகி இருக்கிறது. அப்படி என்றால் 16 கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கவேண்டும். ஆனால் நாட்டில் தொடர்ந்து வேலையில்லா திண்டாட்டம் இருந்து வருகிறது.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டமும் முறையாக நடக்கவில்லை. அதற்கான நிதி ஒதுக்குவதில் முறைகேடு நடக்கிறது. எனவே இதைப்பற்றி எல்லாம் விவாதிக்கவேண்டும்” என்று கூறியிருப்பதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
கலை.ரா