NEET- VIDEO: 26 நாள் உண்ணாவிரதம்- சோனம் வாங்சுக் வாபஸ்- மோடி மகிழ்ச்சி!

Published On:

| By Mathi

Neet: Sonam Wangchuk Ends 26-Day Hunger Strike

நீட் (Neet) தேர்வு மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் (Sonam Wangchuk) இன்று ஜூலை 24-ந் தேதி அதிகாலை தமது போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சோனம் வாங்சுக் தமது எக்ஸ் பக்கத்தில் அதிகாலை 1.08, 1.21 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பு: மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையிலும், லே லடாக் உயர்நிலைக் குழுவின் மூத்த தலைவர்கள் முன்னிலையிலும், 26 நாட்களுக்குப் பிறகு எனது உண்ணாவிதத்தைக் கைவிட்டேன்.

ADVERTISEMENT

முன்னதாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை நேரில் சந்தித்தும் கடிதங்கள் மூலமாகவும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தியிருந்தனர்.

பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும், வன்முறைகள் உருவாகக் கூடிய சாத்தியங்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

என்னுடைய நிபந்தனைகள் குறித்த விரிவான விளக்கத்தை மிக விரைவில் மற்றொரு தனி வீடியோவில் வெளியிடுவேன். எந்த வகையிலுமான வன்முறைக்கு யாரும் இடமளிக்காமல் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

மோடி வீடியோ

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவு 11.52 மணிக்கு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், ”வினாத்தாள் கசிவு குற்றவாளிகளைத் தண்டிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன; இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விரைவு நீதிமன்ற வரைவு மற்றும் குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து விவாதிக்கப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்” என கூறியிருந்தார். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மோடி வேண்டுகோள்

சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, “சோனம் வாங்சுக், மருத்துவர்களின் அறிவுரைப்படி தன் உடல் நலத்தில் கவனம் செலுத்தி விரைவில் உடல் எடையையும் ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். சோனம் வாங்சுக் நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

யார் இந்த சோனம் வாங்சுக் (Sonam Wangchuk)?

ஜம்மு காஷ்மீரின் லடாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற சூழலியல் ஆர்வலர், பொறியாளர், கல்வியாளர். இமயமலைப் பகுதியில் குறைந்த செலவில் இயங்கும் நவீன பள்ளிகளை அமைத்தவர். மேலும், லடாக் பகுதியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க செயற்கைக் பனிமலைகளை உருவாக்கும் முறையைக் கண்டறிந்தவர்.

இவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டுதான் இந்தியில் ‘3 இடியட்ஸ்’ திரைப்படம் உருவானது.

லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரி பல்வேறு தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து கவனம் ஈர்த்தவர். தற்போது மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டுள்ளார் சோனம் வாங்சுக்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share