ரேஷன் கடை என்பது மாநில அரசினுடையதா? மத்திய அரசினுடையதா? அது கூட தெரியாமல் விஜய் பேசுகிறார் என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து 72 நாட்களுக்கு பின்னர் இன்று விஜய் புதுச்சேரி உப்பளம் பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், புதுச்சேரியின் முக்கிய அங்கமாக இருக்கிற காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் எல்லாம் முன்னேற்றமே இல்லை.. ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள் தான். மற்ற மாநிலங்களில் இருப்பது போல இங்கேயும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் என அனைத்து பொருட்களும் வழங்கும் முறை சீராக்கப்பட வேண்டும் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அதில், “தமிழ்நாட்டில் பேசுவதற்கு விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக புதுவையில் மத்திய அரசை குறை சொல்லி பேசியிருக்கிறார்.
எந்தெந்த வளர்ச்சியில் துணை நிற்கவில்லை என்பதை அவர் சொல்ல வேண்டும். பொத்தாம்பொதுவாக சொல்லக்கூடாது. காரைக்கால், ஏனாம் போன்ற பகுதிகளில் எல்லாம் அவர் சென்று பார்த்தாரா?
யாரோ சொல்லிக்கொடுத்ததைத்தான் அவர் பேசுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுவையில் அமைந்த பிறகு மத்திய அரசு எவ்வளவோ நல்ல திட்டங்களை புதுச்சேரி மாநிலத்திற்குக் கொடுத்திருக்கிறது.
விஜய் புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லை எனச் சொல்கிறார். ரேஷன் கடைகள் திறந்து மாதம், மாதம் விலையில்லா அரிசியை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
முதலமைச்சராக ரங்கசாமிதானே இருக்கிறார். அவரையும் தானே விஜய் குறை சொல்கிறார். ரேஷன் கடை என்பது மாநில அரசினுடையதா? மத்திய அரசினுடையதா? அது கூட தெரியாமல் விஜய் பேசுகிறார்.
