முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி திமுக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மே 24) தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்
முல்லை பெரியாறு அணை கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக பொதுப் பணித் துறை அணையை பராமரித்து வருகிறது.
இந்த சூழலில் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா நீண்ட காலமாக கோரிக்கைவிடுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவில், ‘முல்லை பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களும் தனித்தனியாக புதிய சிறப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். இந்த அணை முழு பாதுகாப்போடு இருப்பதால் புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்திருந்தது.
தற்போது கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட புதிதாக திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த திட்ட அறிக்கையின்படி, புதிய அணை கான்கிரீட் கலவையால் கட்டப்படும். அணையின் நீளம் 438 மீட்டர், உயரம் 53.63 மீட்டராக இருக்கும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 624.5 சதுர கி.மீ. ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இந்தநிலையில் முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று(மே 24) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லை பெரியாறு விவகாரத்தில், கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி திமுக சட்ட நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, சட்டப் போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அணையில் முழுமையான ஆய்வுகள் மேற்கொண்டபின், முதலில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ல் தீர்ப்பளித்தது.
மேலும், அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த அப்போதைய திமுக அரசு முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தி, தண்ணீர் தேக்கி வைக்கும் அளவை 152 அடியாக உயர்த்த எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
மீண்டும், 2011-ல் ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, கேரள அரசின் புதிய சட்டங்களை எதிர்த்து, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, 2014 மே 7ஆம் தேதி அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்துவதற்கும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், கேரள அரசு எவ்வித குறுக்கீடும் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்ற தீர்ப்பைப் பெற்றார்.
அதன்படி, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவைப்படாத பணிகளான பிரதான அணையில், கட்டி முடிக்கப்படாமல் இருந்த 20 மீட்டர் நீள முன்பக்க தடுப்புச் சுவரின் உயரம் 158 அடியில் இருந்து 160 அடிக்கு உயர்த்தும் பணி ஏப்ரல் 2017-லும்;
முல்லைப் பெரியாறு அணை மற்றும் சிற்றணையின் இடையே உள்ள மண்குன்றின் முன் பகுதியை 165 அடி உயரம் வரை பலப்படுத்தும் பணி அக்டோபர் 2017லும்; நீர்வழிந்தோடியையும் மற்றும் அணையின் பக்கச் சுவரையும் 165 அடி உயர்த்தும் பணிகளும் முடிக்கப்பட்டன.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், ஜெயலலிதா அரசில் பேபி அணை மற்றும் அணைப் பகுதிகளை பலப்படுத்துவதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பக்கட்டப் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல கேரள அரசு அனுமதி வழங்கவில்லை.
மேலும், பேபி அணையை பலப்படுத்தும் கருவிகளைப் பொருத்துவதற்கு 23 மரங்களை வெட்ட மத்திய மற்றும் கேரள வனத்துறைகளிடமிருந்து அனுமதி கோரப்பட்டது. வனத்துறையின் அனுமதியைப் பெற கேரள அரசு தடையாக இருந்தது. இதனால் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று வரை நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து நான், முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, பிரதமரிடம் நேரடியாகவும், மத்திய நீர்வளக் குழுமம், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை, கேரள அரசு, கேரள வனத்துறை என்று அனைவருக்கும் பேபி அணையை பலப்படுத்த, தமிழக பொதுப்பணித்துறைக்கு அனுமதி வழங்குமாறு கடிதங்கள் மூலம் வலியுறுத்தினேன். ஆனால், கேரள வனத்துறையின் அனுமதி வழங்கப்படாததால், பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் தொடர முடியவில்லை.
இந்நிலையில், மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்றது. 2021 அக்டோபர் மாதம் பருவ மழையின் போது பெய்த கன மழையால் நீர்நிலைகள் நிரம்பி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சுமார் 138.85 அடியாக இருக்கும்போதே, கேரள அரசின் அமைச்சர்கள் தன்னிச்சையாக அணையின் ஷட்டர்களைத் திறந்து நீரை வெளியேற்றினர்.
தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில், தமிழக அரசின் அனுமதியின்றி 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று கேரள அமைச்சர்கள் முன்னிலையில், முல்லைப் பெரியாறு அணையை திறந்துவிட்டது தவறு என்று அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்தேன். 2021 நவம்பர் 9 அன்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே இருக்கும் 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை 2021 அக்டோபர் மாதம் அனுமதி வழங்கியதாகவும், அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாகவும் தமிழக அரசு பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது.
அதில் அணையை வலுப்படுத்த கட்டுமானப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக பெரியாறு அணைக்கு செல்லும் பாதையை பலப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த அறிக்கை வெளிவந்த உடனேயே கேரள முதலமைச்சர் அதிர்ச்சியடைந்ததாகவும், மரம் வெட்ட யாரும் உத்தரவிடவில்லை என்றும், தமிழக அரசுக்கு அனுமதி அளித்து கடிதம் எழுதியிருப்பின், அந்த வனத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவித்தன.
பேபி அணையில் மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதிக் கடிதத்தை ரத்து செய்வதாக கேரள வனத் துறை அமைச்சர் அறிவித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் திமுக அரசின் செயலற்ற தன்மையால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும், குடிநீருக்காக நம்பி உள்ள பல மாவட்ட மக்களும் இன்றைக்கு வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இனியாவது இந்த அரசு, கூட்டணிக் கட்சி என்று பாராமல், கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை எடுத்து கேரள அரசின் விஷமத்தனமான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும்;
தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டவும், முல்லைப் பெரியாறு அணையில், உச்ச நீதிமன்ற ஆணையின்படி பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
USA vs BAN T20I: வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற அமெரிக்கா
கோவை: பூங்காவில் விளையாடிய 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பலி!