பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் வெளியிட்ட வீடியோ பதிவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ”மிஸ்டர் மோடி! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத்தான் மாணவர்கள் கேட்கின்றனர். மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை திசைதிருப்பி அவமதிக்கும் வகையில் நள்ளிரவு வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள்.
- தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்க
- மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை
- மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி நேற்று ஜூலை 23-ந் தேதி நள்ளிரவு 11.52 மணிக்கு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “வினாத்தாள் கசிவு குற்றவாளிகளைத் தண்டிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன; இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விரைவு நீதிமன்ற வரைவு மற்றும் குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து விவாதிக்கப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்திருந்தார்.
நடிகர் பிரகாஷ் ராஜ்
பிரதமர் மோடியின் வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “உங்களது பயத்தை என்னால் பார்க்க முடிகிறது. என் தேசத்தின் இளைஞர்களே! உங்களுக்கு நன்றி! இதற்காக என்னுடைய ‘கரப்பான் பூச்சிகளே’! உங்களுக்கும் நன்றி.. நன்றி” என தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன் கண்டனம்
இதேபோல சிபிஎம் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன், ““வினாத்தாள் கசிவு குறித்து முடிவெடுக்க நாளை அமைச்சரவைக் கூட்டம் கூடும், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இது குறித்து சட்டம் நிறைவேற்றப்படும்” என்றும் நள்ளிரவில் அறிவித்துள்ளார் பிரதமர்.
“அப்படியொரு மசோதா வரும் முன்பு தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கசியட்டும்” என கிண்டலடித்துள்ளது CJP.
பொறுப்பேற்பில் இருந்து தப்பிக்கவும், அமைச்சரைக் காப்பாற்றவும் இரவெல்லாம் பணியாற்றும் பிரதமர் அவர்களே! இன்னும் எத்தனை நாள் குறுக்குவழியை மட்டுமே தேர்வு செய்வீர்கள்? நேர்வழி ஒன்றிருக்கிறது. அந்த வழியில் நடக்க சொல்கிறார்கள் மாணவர்கள்” என தெரிவித்துள்ளார்.
