அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கரை திமுக தலைவர் ஸ்டாலின் (MK Stalin), ‘அணுக’ கூட விடமாட்டார் என முன்னாள் அமைச்சர் ரகுபதி (Regupathy) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுகவின் அதிருப்தி கோஷ்டியான எஸ்பி வேலுமணி அணியில் இருந்தார். எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அவரது அணியில் இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இணைந்துவிட்டனர். ஆனால் சி.விஜயபாஸ்கர், சிவி சண்முகம் உள்ளிட்டோர் இன்னமும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.
சி.விஜயபாஸ்கர் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையக் கூடும் எனவும் தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ”விஜயபாஸ்கரை ஸ்டாலின் திமுகவில் சேர்க்கமாட்டார்; அவரை பக்கத்தில் கூட அணுகவிடமாட்டார் ஸ்டாலின்.
விஜயபாஸ்கரை அதிமுகவும் தவெகவும் புறக்கணித்துவிட்டன. நடுரோட்டில் அனாதை போல் நிற்கிறார் விஜயபாஸ்கர்.
முதல்வர் விஜய் ஆட்சியில், பெண்களுடைய பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. அதுதான் இந்த ஆட்சியினுடைய 15, 20 நாள் சாதனை என்பதை மன வேதனையோடு நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். ப்ரோ விஜய்… சிஎம் சார், இனிமேலாவது இதுல கான்சன்ட்ரேட் (Concentrate) பண்ணுங்க.
தேர்தலில் உழைச்சவனுக்கெல்லாம் மரியாதை கிடையாது. யார் வேணாலும் திடீர்னு வந்துடலாம்கிற ஒரு புதிய கண்டுபிடிப்பை இந்திய அரசியலுக்கு தந்திருக்கிறீர்கள். அந்த புதிய கண்டுபிடிப்பு இனிமே தொடராம இருந்தால் சரி, இல்லாட்டி நாடு கெட்டு குட்டிச்சுவராப் போயிடும்” என்றார்.
