தமிழகம் முழுவதும் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் (Sub-Registrar) இன்று ஜூன் 4-ந் தேதி ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் இன்று முகூர்த்த நாள் என்பதால் அதிக எண்ணிக்கையில் டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் 60-க்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சார் பதிவாளர் அலுவலகங்களில் அலுவலர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து பத்திர பதிவுகள் உள்ளிட்ட கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டன.
அத்துடன் பத்திரப் பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்களிடமும் ‘லஞ்சம் கொடுக்கப்பட்டதா?’ என விசாரிக்கப்பட்டது.
சென்னை, கோவை, தருமபுரி, நெல்லை ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த சோதனைகளில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
