திருவாரூரில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin), முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் இல்ல திருமணத்தை ஜூன் 25-ந் தேதி நடத்தி வைத்தார்.
உ.மதிவாணனின் இளைய மகன் கதிரவன்- மெளனிகா ஆகியோரது திருமணம் திருவாரூர் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.முத்தரசன், திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர். பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த திருமணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஒரு சுவாரசிய தகவல் பகிரப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் பக்கத்தில் திருவாரூரைச் சேர்ந்த Arun Gopi Raj, ”2006 ஆம் ஆண்டு திருவாரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் தாழை.அறிவழகன் அதிமுக சார்பில் தங்கமணி அறிவிக்கப்பட்டார்.
திருவாரூர் தொகுதியில் அதிகம் இருப்பது ஆதி திராவிடர் சமுகம்… எப்படி மாற்றி தந்தார்கள் என டேட்டோவோடு திமுக மேலிடத்திற்கு தகவல் போகிறது.
அதன் பிறகு தாழை. அறிவழகன் மாற்றப்பட்டு உ.மதிவாணன் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.
மதிவாணன் vs தங்கமணி இருவரும் போட்டியிடுகிறார்கள். திமுக மதிவாணன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். அதிமுக தங்கமணி தோல்வி அடைகிறார்.
இருபது ஆண்டுகள் கழித்து இன்று மதிவாணன் தன் இளைய மகனுக்கு தங்கமணி மகளை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கிறார். தேர்தலை சந்தித்து வெற்றி தோல்வி கண்டவர்களே சமாதானமாகி சம்பந்திகளாகிறார்கள்.
ஒரு பைசாவிற்கும் பிரயோஜனம் இல்லாத நீங்கள் ஏன் இணையத்தில் இவ்வளவு வக்கிரத்துடன் மோதிக்கொள்ள வேண்டும்?” என எழுதியுள்ளது கவனம் பெற்றுள்ளது..
