2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்தின் அனைத்து இடங்களிலும் மொபைல் ஆப் மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படவுள்ளது.
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
மாநில அரசுகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 32,05,98,542 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 15,44,25,837 தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வருகின்றனர்.
இதில் தமிழ்நாட்டில் 1,36,11,715 பேர் பதிவு செய்து 94,68,757 பேர் வேலைக்கு சென்று வருகின்றனர்.
நூறு நாள் வேலைக்கு வருபவர்கள் பேப்பரில் மட்டும் கையெழுத்திட்டு வருகைப்பதிவு செய்து வந்தனர். இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது..
இதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக மொபைல் அப்ளிகேஷன் மூலம் வருகை பதிவை கடைபிடிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
கடந்த மே 16, 2022 முதல் 20 அல்லது அதற்கும் மேற்பட்ட அனைத்து பணியிடங்களிலும் ஆப் மூலம் வருகைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இந்த இடங்களில் தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு (என்.எம்.எம்.எஸ்) என்ற செயலி மூலம் வருகைப்பதிவு செய்யப்பட்டு வந்தது.
இதில், ஜியோடேக் (போட்டோ மற்றும் வீடியோக்கள் அடங்கிய புவியியல் இடங்கள்) முறையில் தொழிலாளர்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
ஆனால், கிராமப்புறங்களில் தொழில்நுட்ப வசதி இல்லாதது, ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டிய அவசியம், இணைய இணைப்புக்கு பணம் செலுத்துதல் மற்றும் ஒழுங்கற்ற இணைய இணைப்பில் ஏற்படும் சிக்கல் என இதில் புகார்கள் எழுந்தன.
இந்தசூழலில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதியிட்ட மத்திய அரசின் உத்தரவில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் அனைத்து இடங்களிலும் வருகைப்பதிவை மொபை ஆப் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்து வேலையாட்களும் வேலைநாளின் முற்பகல், பிற்பகல் என இருவேளையும் குறித்த நேரத்தில் செல்போன் செயலி மூலமாக தங்கள் வருகையை தவறாது பதிவுசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரியா
