வைஃபை ஆன் செய்ததும் திமுக மாவட்ட செயலாளர்கள் சிலர், ’வருகிறது உள்ளாட்சித் தேர்தல்’ என்ற மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணை செய்தியின் லிங்க்கை இன்பாக்ஸில் அனுப்பிவைத்து, அதோடு சில கேள்விக்குறிகளையும் சேர்த்திருந்தனர்.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் கொஞ்சம் விசாரித்து தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“மின்னம்பலம் மே 14 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணை வருகிறது உள்ளாட்சி தேர்தல் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தி திமுகவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு திமுக வாட்ஸ் அப் குரூப் களில் பகிரப்பட்ட இந்த செய்தியை பகிர்ந்து அதற்குள்ளாகவா என்று சில கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்கள் 9 மாவட்ட திமுக நிர்வாகிகள்.
2019 ஆம் ஆண்டு எடப்பாடி ஆட்சியில் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது வருவாய் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஒன்பது மாவட்டங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் அந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021ல் தான் மீதி உள்ள 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. எனவே இந்த 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு பதவிக்காலம் 2026 வரை உள்ளது. 2019ல் நடத்தப்பட்ட 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பதவிக்காலம் 2024 டிசம்பரோடு முடிவடையும் நிலையில்… மீதமிருக்கும் ஒன்பது மாவட்டங்களுக்கும் சேர்த்து இந்த வருடத்திலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன ஒன்பது மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ’எங்களுக்கு இன்னும் பதவிக்காலம் இரண்டு வருடங்கள் இருக்கிறது. அது மட்டுமல்ல, நாங்கள் 2021 இல் இந்த பதவிக்கு வருவதற்காக தேர்தலில் செலவழித்த தொகையையே இன்னும் மீட்டு எடுக்க வில்லை.
அதற்குள் மீண்டும் தேர்தல் வைத்து மீண்டும் செலவு செய்ய வேண்டுமா? 2019ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாதிக்கு பாதி தான் திமுக வெற்றி பெற்றது. ஆனால், 2021 இல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 100% பதவிகள் திமுகவால் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் எங்களை முழுமையாக பணியாற்ற விடவில்லை என்றால் அதிருப்தியை உண்டாக்கும்’ என்று தத்தமது மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களிடமும் அமைச்சர்களிடமும் முறையிட தொடங்கியுள்ளனர்.
இந்த கோரிக்கைக் குரல்கள் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக உள்ளாட்சி தேர்தல் வைத்தால் திமுகவில் உட்கட்சிப் பூசல் அதிகமாகும், வாய்ப்பு கிடைக்காத கோஷ்டிகள் சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக பணி செய்யாத நிலை ஏற்படும்’ என்றும் சிலர் எச்சரிக்கிறார்கள்.
இதே நேரம் முதலமைச்சர் ஸ்டாலின் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஊரக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி முடித்து தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் திமுகவின் பிரதிநிதிகள் இருந்தால் சட்டமன்றத் தேர்தலில் அது கூடுதல் வலுவாக இருக்கும் என்று கருதுவதாகவும் சொல்கிறார்கள்.
ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விக்கு 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…